Wednesday, July 25, 2012

நான் ரசித்த சில... -4

வந்தேறிகளும் மண்ணின் மைந்தர்களும்

இந்தப் பதிவில் சொல்லப்படும் வரலாற்று உண்மைகள் நான் ரசித்தவை அல்ல. மனிதனின் வேடிக்கையான மனோ பாவங்களையும் அதன் விபரீதமான விளைவுகளையும் வரலாற்றில் கண்ட பின்பும் மனிதனின் முட்டாள்த்தனம் தொடர்வதைக் கண்டு வியக்கிறேன். அந்த விளைவே இந்தப் பதிவு...
அசோம் மாநிலத்தில் கலவரம். என்ன காரணம்? யார் செய்கிறார்கள்? ஆதி சமூகங்களான பழங்குடியினர், வங்கத்திலிருந்து வந்தேறிகளாகக் கருதும் இஸ்லாமிய சமூகத்தினரை எதிர்த்து அமைத்த வன்முறைக் குழுவின் நான்கு உறுப்பினர்கள் கொலை செய்யப்படுகின்றனர். உடனே பழிவாங்க வேண்டாமா? தொடங்கியது கலவரம். கையாலாகாத மாநில அரசு, ராணுவப் படைகளைக் கோரி கலவரத்தை அடக்கிய பொது பலி எண்ணிக்கை 36 - வீடுகளை இழந்தோர் 150000 பேர். ஒவ்வொரு மனிதனும்(இந்தியன் அல்ல) வெட்கப் பட வேண்டிய நேர்வு.
 இனமானங்களும், சமயச் சார்புகளும் கோரக் கரங்களை விரித்த வரலாறுகளைக் கண்டது 20ம் நூற்றாண்டு. ஒற்றை நிகழ்வுக்காக துரத்தித் துரத்தி யூதர்கள் கிறித்தவ ஐரோப்பாவால் பல நூற்றாண்டுகள் பழி வாங்கப் பட்ட இழப்புகளைக் காட்டிலும், ஹிட்லர் என்ற அந்த ஒற்றை மனிதன் நிகழ்த்திய மரண விளையாட்டுக்களில் அந்த இனம் இழந்தது அதிகம். ஆனால் இழப்புக்களின் வலி அறிந்து மனிதத்தின் வழியைக் கடைபிடித்திருக்க வேண்டிய அந்த இனம் இஸ்ரேல் எனும் புராணக் கானலைத் தேடிச் சென்று பாலஸ்தீனத்தை பாலை ஆக்கியது.
வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மனித இடப்பெயர்வுகளில் வலி மிகுந்ததும், மனிதத்தின் வலி குறைந்ததுமான நிகழ்வு இந்தியப் பிரிவினை. அதன் ஒத்திகை 1905 -இல் வங்கப் பிரிவனை என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. இங்கு வரலாற்றுச் சோகங்களுக்கு வடிகால் தேடுவதைச் சாக்காகச் சொல்லி ஒரு ஓரங்க நாடகம் நிகழ்த்தப்பட்டது. ஆண்ட இனம் வீழ்வதா என்று இசுலாமியர்கள் தூண்டப் பட்டால், வந்தேறிகளை விரட்டுங்கள் என்று அடிமைப்படுத்திய வந்தேறிகளிடமே மனுக் கொடுத்தது மனுநீதியை நம்பிய கூட்டம். யாருக்கு யார் செய்த அநீதிக்கு பழி வாங்குவது? வரலாற்றின் கோடுகளை எங்கே வரைவது?
சரி, பிரிந்து சென்ற பாகிஸ்தானமாவது நிலைத்ததா? வங்கத்துச் சகோதரர்களையும் அவர்களது மொழியையும் துச்சமென மதித்தது. அதற்கு நியாயம் செய்ய நினைத்த இந்தியாவாவது இன்று பிழைக்கிறதா என்றால் இப்படி ஒரு சிக்கல். எந்த வங்கத்தை உருவாக்கியதோ அங்கிருந்து வரும் அகதிகளாலேயே இந்தியாவின் சமன்பாட்டில் குழப்பம்.
ஒரு பக்கம் நியாயம் செய்த இந்தியா, மறுபக்கம் கொண்ட அநியாயப் பார்வை இன்னும் வெறுப்பூட்டுவது. ஈழம் இன்று இடுகாடான சோகத்தில் தான் இந்தியாவின் கபட நாடகங்கள் எத்தனை? வேடிக்கை நிலைப்பாடுகள் எத்தனை? ஒற்றை மனிதனின் மரணத்திற்கு ஒரு இனமே அழிய உதவிய இந்தியாவை எப்படி பஞ்சசீல தேசம் என்பது.
விலங்குகளை வதை செய்வதைக் கண்டு கொதித்த புத்தன் பிறந்த மண்ணும், அவனது பௌத்தம் தழைத்த மண்ணும் சேர்ந்து ஒரு மனிதப் பேரழிவை உருவாக்கியது வரலாற்றின் வீழ்ச்சி அல்லாமல் வேறென்ன?
காஷ்மீரத்துக்கு இந்தியா கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததே என்று அவர்களுக்கு வாதாடலாம் என்றால் அவர்கள் செய்த அநீதி தடுக்கிறது. தங்களுடைய இனத்தைச் சேர்ந்த சகோதர்களிடம் இஸ்ரேல் செய்த அக்கிரமத்துகாக பரிந்து பேசிக்கொண்டே காஷ்மீரத்துப் பண்டிட்டுகளுக்கு அதே அநீதியை இழைத்த மாபெரும் நீதிமான்கள் அவர்கள்.
மேற்சொன்ன அத்தனை நிகழ்வுகளிலும் இங்கிலாந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்மந்தப் பட்டிருக்கிறது. தந்திரமாக இஸ்ரேலுக்கு உதவியதாகட்டும், போரிடுவதற்காகவே இரு நாடுகளை இந்தியத் துணைக்கண்டத்தில் உருவாக்கியதாகட்டும், ஒன்றாய் விடுதலை வேண்டிப் போராடிய இரு இனங்களைத் துண்டாடி ஈழத்தில் இழவு கொட்டியதாகட்டும் எத்தனை வக்கிர புத்தி அந்தத் தேசத்துக்கு?
இவையன்றி வியட்நாமிலும் ஜெர்மனியிலும் களம் அமைத்து வேட்டையாடிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் என்ன சொல்வது? அவர்களது அதிகாரப் போட்டிக்கும் எண்ணைப்பசிக்கும் பலியிடப்பட்ட தேசங்கள் ஈராக்கும் ஆப்கானிஸ்தானமும். இதில் மதங்களை வைத்து விளையாடி, மனிதர்களை விலை, பேசி போர்களை நடத்தியே வல்லராசாகத் தன்னை நிலை நிறுத்திய பெருமை அமெரிக்காவிற்கு பெரும்பங்கு உண்டு. வல்லரசாகத் திகழும் தேசத்தின் லட்சணம் இது தான்.
இந்த வல்லரசின் அதிபர் தேர்தலில் ஒரு அருவருப்பான வாதம் வேறு. இன்றைய அதிபரை எதிர்க்கும் வேட்பாளரின் அடிப்பொடிகள் உதிர்த்துள்ள முத்துக்களைச் சொல்கிறேன். ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ்வு தெரியாதாம், ஆங்கிலோ-சாக்சன் உறவு தெரியாதாம். அவரது நிறமும் பூர்வீகமும் காரணமாம். வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின் பழங்குடியினத்து மனிதனுக்கும், வல்லரசாகத் தன்னை நிறுவியிருக்கும் அமெரிக்காவின் அதிபராகத் துடிக்கும் மனிதனுக்கும் எத்தனை ஒற்றுமை? சக மனிதனைச் சகிக்காத மனித இனம் எப்படி படைப்பின் உயர்வு? பரிணாமத்தின் உச்சம்?
காக்கை குருவி எங்கள் சாதி என்றானே பாரதி, விரைவாகவோ மெதுவாகவோ ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும் என்றானே மார்டின் லூதர் கிங். அவர்கள் எங்கே? இந்த மதியீனர்கள் எங்கே? என்ன சொல்கிறீர்கள்?

 

2 comments: