Tuesday, July 24, 2012

நான் ரசித்த சில...-3

சென்னை

மூன்று நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த நகரம், எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருக்கிறது. தொண்டை மண்டலத்துச் சிறு கிராமம் இன்று அண்டை அயல் கிராமங்களையும் சிறு நகர்களையும் உண்டு விரிந்து விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது வெள்ளைக்காரன் பேட்டை தான். கறுப்பர் நகர் என்றும் வெள்ளையர் நகர் என்றும் நிறம் பிரித்து அமைத்த வண்ணக் கனவு. இந்தியாவை வர்த்தகம் செய்ய வந்த போர்துகீசியரில் ஆரம்பித்து வசதியாக இரு நூற்றாண்டு ஆண்ட பிரிட்டிஷார் வரை தேடி உருவாக்கிய பட்டணம் இது. "கர்நாடகப் போர்" என்று வர்ணிக்கப் படும் பிரெஞ்சு ஆங்கிலப் போரின் மையம் சென்னையே. கோட்டையைப் பிடிக்கும் போட்டி மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது பாருங்கள்.

பட்டினத்தார் சமாதியும் இங்கே இருக்கிறது, பட்டணத்து சந்தடியும் இருக்கிறது. ஆழ்வார்கள் தோன்றிய அல்லிக்கேணியிலே ஆற்காட்டு நவாப் கட்டிய செம்மசூதியும் இருக்கிறது. ஏசுநாதரின் பனிரெண்டாவது அப்போஸ்தலர் தாமஸ் வந்த பரங்கி மலை சென்னப்ப நாயக்கரின் சென்னையில் தான் இருக்கிறது.
 கர்நாடக சங்கீத உலகம் போற்றும் டிசம்பர் திருவவையாரும் இதுவே, car parts தயாரிக்கும் இந்தியாவின் டெட்ராய்டும் இதுவே.
மதராஸ் மனதே என்று சொல்லித் தான் பார்த்தார்கள். ராஜாஜி விடவில்லை. மதராஸ் நமதே என்று ஆக்கினார்.

சென்னையின் அடையாளங்கள் தனித்துவமானவை. அதற்கென ஒரு மொழி... அதற்கென ஒரு வகைப் பாடல்... கொல்கத்தா இன்னும் ட்ராம்களை தன் அடையாளாமாக வைத்திருக்கிறது. சென்னை ட்ராம்களுக்கு ஓய்வு தந்து, மெட்ரோ-வைத் தாண்டி மோனோ-வுக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறது.
மெரினா என்னும் உலகிலே  இரண்டாவது நீளமான கடற்கரை இருக்கிறது, கூவம் அடையாறு என்னும் இரண்டு நதி பாயும் நதிக்கரைகள் இருக்கின்றன, பல்லவர் காலத்து ஏரிக்கரைகளும் இருக்கின்றன. ஆனால் தெலுகு-கங்கைக் கால்வாயோ, சோழன் கட்டிய வீராணமோ சென்னைக்கு தண்ணீர் தந்தால் தான் இதன் தாகம் தீரும்.

உலக வங்கிக் கிளை உள்ள கீழை நகரம் இதுவே. உலகிலேயே நாலரை சதவிகித பொறியியல் வல்லுனர்களை உருவாக்கும் பல்கலைக் கழகம் இருப்பதும் இங்கேயே. வந்தாரை வாழ்விக்கும் தமிழகம் என்ற பெயருக்கு பொருத்தமான தலை-நகரம். வாழ வைப்பது மட்டுமல்ல வருவதைப்  பயன்படுத்தவும் தயங்காத நகரம்.

லண்டனுக்குப் பிறகு இரட்டை நதி பாயும் தருமமிகு சென்னை என்பது அழகிய கற்பனை. அரை நூற்றாண்டிலே அந்த கற்பனை விரிந்து இருக்கிறது. ஆனால் அழகை இழந்து விட்டு.  ஆனால் ஆங்கிலத்திலே சொல்லுவது போல இது greater சென்னை தான். என்ன சொல்கிறீர்கள்?

No comments:

Post a Comment