Saturday, November 10, 2012

சில செய்திகளும் சில கருத்துக்களும்

இன்றைய இந்தியாவின் வரலாறு எழுதப் பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை நமக்கு, நமது சமூகத்துக்கு இருக்கிறதா? இந்தக் கேள்வி என் மனதில் கடந்த இரு வாரங்களாக எழுந்து கொண்டே இருந்தது. சில செய்திகளைப் படித்தவுடன் அயர்ச்சியும் சில செய்திகளைப் படித்தவுடன் எல்லாவற்றின் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டது.


1. பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி மீதான ஊழல் புகார்.

இன்றைய மத்திய அரசு பெற்றுள்ள எல்லாப் பெருமைகளிலும் தலையாயது ஊழலுக்கு முன்னுரிமை அளித்து பதவி வழங்குவது என்ற உயரிய பெருமை தான். அலைக்கற்றை ஊழலில் புகழ் பெற்ற ஆ.ராசா நாடாளுமன்ற குழுவில் உறுப்பினர். குற்றச்சாட்டுக்கள் என்னவானது என்றே தெரியாத நிலையில் மீண்டும் சசி தரூருக்குப் பதவி. இதற்கெல்லாம் தார்மீக உரிமையோடு பா.ஜ.க. கேள்வி எழுப்ப வேண்டிய தருணத்தில், அதன் தலைமை மீதே புகார் வருகிறது. தனது அமைச்சர்களையும், தலைவியின் குடும்பத்தையும் விசாரணையின் தொடுகைக்கு அப்பால் வைத்திருக்கும் காங்கிரஸ் அரசு கட்கரியின் மீதான புகாரை விசாரிக்க உத்தரவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் பா.ஜ.க. என்ன செய்திருக்க வேண்டும்?

ஆ.ராசாவின் பதவி எப்படி untenable-ஆக செல்லாததாகப் பட்டதோ, எந்தக் காரணத்துக்காக எடியுரப்பா பதவி விலக வலியுறுத்தப் பட்டதோ, அதே காரணத்திற்கு கட்கரியும் பதவி விலக வேண்டியது தானே நியாயமான முடிவாக இருக்க முடியும்? அதை விட்டு கூடிக்கூடிப் பேசி ஆவதென்ன? தார்மீக உரிமையையும் தர்க்க ரீதியான தோல்வியையும் பா.ஜ.க அடைந்து விட்டதாகவே எனக்குப் படுகிறது. இந்த ஆட்சிக்கு மாற்று என்று பா.ஜ.க தன்னை நிலை நிறுத்த முடியாத நிலைக்கு தன்னைத் தானே இட்டு வருகிறது. வருந்தத் தக்க நிகழ்வுகள்.


2. சாதீயக் கலவரங்கள்

அமைதிப் பூங்கா என்றும் பகுத்தறிவின் பயிற்சிக் களம் என்றும் தமிழகத்தை நாம் வருணித்துக் கொள்வதில் உள்ள அபத்தம் கடந்த இரு வாரங்களாக நிரூபிக்கப் பட்டு வருகிறது. ஒரு புறம் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் முட்டலும் மோதலும். மறு புறம் குடும்பப் பிரச்னைகளைச் சாதிப் பிரச்னைகளாக்கி வன்முறைக்கு வித்திடுவது. எத்தனை எத்தனை கேவலமான பிறவி இந்த மனிதன் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

மறைந்த தலைவர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்தா விட்டாலும் அவர்களது புகழுக்கு மாசு ஏற்படப் போவதில்லை. அவர்கள் அதற்காக ஏங்கித் தம் வாழ்நாளில் பணியாற்றவுமில்லை. நமது குறுகிய எல்லைகளுக்குள் அவர்களை நிறுத்தி அதற்காக வன்முறையில் ஈடுபட்டு மறைந்தவர்களுக்கு இழுக்குத் தேடித் தருவதில் என்ன பயன்?

வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் திருத்த வேண்டும் என்று பல்வேறு கூக்குரல்கள். அதிலே பா.ம.க., கொ.மு.க. என்று அரசியல் அவதாரம் எடுத்த சாதீயக் கட்சிகளின் மலிவான பிரச்சாரங்களும் சுய சாதித் தம்பட்டமும் ஒடுக்கப் பட வேண்டியவை. அதிலும் காதல் திருமணங்களைக் கண்டித்து இவர்கள் எழுப்பும் முழக்கங்கள் சுத்தமான சாதீய வெறிப் பிதற்றல்கள். இதன் மூலம் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டிக்க வேண்டிய தாழ்த்தப்பட்டோருக்கான இயக்கங்கள், தாமும் கலாசாரக் காவலர் பதவிக்குப் போட்டியிடுகின்றன.

சட்டம் ஒழுங்கைக் காப்பேன் என்று சூளுரைத்து ஆட்சிக்கு வந்த அரசு அதிமுக அரசு. அதனை உறுதி செய்ய வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. இதனை அவர் அறியாதவர் அல்ல. ஆனால் அரசின் நடவடிக்கைகள் பிரச்னைகளைச் சமாளிக்கின்றனவே ஒழிய தவிர்க்கவில்லை. இது நிச்சயம் வருந்தத் தக்கதே. நிவாரண அறிவுப்புகள் விரைவான விசாரணைகள் நடந்த நிகழ்வுகளுக்கு பரிகாரம் அல்ல. அடுத்து இது மீண்டும் நிகழா வண்ணம் தடுக்க வேண்டியதே அரசின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment